காலம் பிரசவித்த சிசுவைப்போலத் தோன்றுகிறது இளவேனில். கிழக்கின் ஓரம் மரங்களிடையே தத்தித்தத்தியபடி இருந்தான் குஞ்சுச் சூரியன். நேரத்தைப் பார்த்தேன். காலை ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினேன். என்னதான் அவசரமோ? துளிர்விடுவதற்கு முன் பூக்களை மொட்டவிழ்ந்திருதது மரங்கள். எங்கும் பறவைகளின் கீச்சொலிகள். பால்மொச்சை மாறாத மெல்லிய வெயில். இறகுகள் முளைக்கத் தொடங்கும் கிளிக்குஞ்சைப் போல நிலம். குளிருடைகளுக்குள் உடலை மூடிக்கட்டி வைத்திருந்த மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள் பிஞ்சு வெயிலைக் கண்டதும் முடிந்தளவு உடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு திரிகிறார்கள். புகையடித்து நிறக்கவைத்த வாழைக்குலை போல பளிச்சென்றடிக்கிறது வெண்மை. ஒரு கவிதையில் ‘இது ருதுகாலம்’ என எழுதியது நினைவுக்கு வந்தது.
நான் பயிற்சிக்காக நடப்பதற்கு வாய்ப்பு அமைவதில்லை. மதியம்தாண்டப் புறப்பட்டு இரவு முழுவதும் எந்திரங்களோடு எந்திரமாக மாரடித்து அதிகாலை நாலுமணிக்கு வீடு மீளும் எனக்கு பயிற்சிக்காக அல்ல சும்மா காலாற நடப்பதற்குக் கூட மனசு இடங்கொடுப்பதில்லை. சென்ற தடைவை என் குடும்ப வைத்தியரிடம் சென்ற போது, தினமும் ஒரு அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி வேண்டும் என மிகமிகக்கண்டிப்பாக சொன்னார். ஓவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கின்ற போது சொல்லுகிற அறிவுரைதான். இருந்தாலும் இம்முறை “வெறும் அறிவுரைதானே” என்று கழித்துவிட முடியவில்லை. இருவாரங்களுக்கு முன் இரவு நித்திரைக்குப் போன நண்பன் ஒருவன் காலை எழுந்திருக்கவில்லை. அன்று காலையில் தொலைபேசியூடாக வந்த இச்சேதி என்னை உலுக்கியிருந்தது. வைத்தியர் சொல்லியும் கேளாத மனசு இதற்குப்பின் மெல்லமெல்ல யோசிக்கத் தொடங்கியது. வேலைக்குப் போகிறாய்; புத்தகம் படிக்கிறாய்; இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் முன்னிக்கிறாய்; கலியாணம் காட்சி கொண்டாட்டம் என ஒவ்வொரு வார இறுதியிலும் கூடிக் குடித்துக் கூத்தடிக்கிறாய்; கவிதை எழுதுகிறாய்; சமையல் செய்கிறாய்; போதாக்குறைக்கு பின் முற்றத்தோட்டத்தை வேறு பராமரிக்கிறாய். இவை எல்லாவற்றிக்குமான நேரத்தை உன்னால் எடுத்துக்கொள்ள முடிகிறது. உனக்காக, உன் உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு அரை மணி நேரத்தைக்கூட ஒதுக்க முடியாதா?
ம்… மரணபயம் யாரைத்தான் விட்டது. கரையாத கல்மனதைக் கூட கலங்கடித்துவிடும். இப்போ இரு வாரமாக நடக்கத் தொடங்கியிருக்கிறேன். ஒரு கவிதை எழுதுவதைவிட இந்த நடக்கிற சுகம் மெல்லிய சந்தோசத்தைத் தருகிறது. என் வீட்டுப் படியிலிருந்து இறங்கும் போது மனசுக்குள் ஒரு எல்லையை தீர்மானித்துக் கொண்டு புறப்படுவதில்லை. கால்போன போக்கிலே நடப்பது. களைத்தோயும் போது வீடு திரும்புவது. அவ்வளவுதான். அது ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பின்னாக அமையும். நான் படியிலிருந்து இறங்கியதும் எனக்கு முன்னே என் மனக்குருவி புறப்பட்டுவிடும். என் பார்வையிலிருந்து விலகாது தத்தித்தத்தி ஒவ்வொரு இடமாய் குந்தியிருக்கும். புதுப்புது காட்சிகளை கண் முன்னால் விரித்து வைக்கும். "இது வரைநாளும் அயலைப் பார்க்காமல் இருந்தாயே! நீயெல்லாம் ஒரு மனிதனா? வெறும் எந்திரம்" என இடித்துரைக்கும். இப்பொழுது ஒரு புதிய உலகம் என்னுள் பிரமிப்பைத் தருகிறது. நிலம் விரிகிற அழகு, காலை நேரத்துப் பணியாளரின் அவசரம், பள்ளிச் சிறுவர்களின் உலகம், ஒவ்வொரு வீட்டின் முன்னுள்ள பூந்தோட்டங்கள்; இயற்கையை நேசிக்கிற மனிதர்கள், அவர்கள் முதுமையை எதிர்கொள்கின்ற துணிச்சல் இத்தியாதி இத்தியாதி என புதிய உலகத்தை காண்கிறேன். ஒவ்வொரு காலையும் முற்றிலும் வேறுவேறானதாகவே இருக்கிறது. இப்பொழுதொல்லாம் மனக்குருவியை மேயவிட்டு அழைத்து வருவதே இந்த நேரத்து வேலை போலாகிவிட்டது.
என் குருவி ‘எக்லின்டன்&கெனடிச்' சந்திப்பிலிருந்து தென்புறம் திரும்பி கெனடி வீதியில் செல்லத்தொடங்கியது. ஒரு பத்து நிமிடங்கள் அதைப் பின்தொடர்ந்திருப்பேன். என் வலப்புறம் விரிந்து கிடக்கிறது ‘பைன்கில்’சேமக்காலை. எனக்கு அதன் வெளித்தோற்றம் மற்றும் விஸ்தீரணம் தொடர்பாக ஓரளவு மனக்கணக்குத் தெரியும். அண்ணளவாக ஒரு சதுர கிலோமீற்றர் வரையில் இருக்கும். சிறு வயதிலிருந்து சுடலை அல்லது இடுகாடுகள் தொடர்பாக மனதில் ஒருவித அச்சம் உண்டு. அத்தகைய கதைகள் பல சொல்லப்பட்டு வளர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். தேவைகருதாது ஒருபோதும் சேமக்காலைக்குள் நுளைந்து பார்த்ததில்லை. தேவை கருதிக் கூட நான் அதிகம் சென்றது சுடுகாடுகளுக்குத்தான்.
வெளியிலிருந்து பார்க்கும் போது கல்லறைகள் சிறுசிறு வீடுகள் போலவும், கல்லறைத்தோட்டம் ஒரு சிறு பட்டணத்தின் ‘மாடல்’ செய்யப்பட்ட வடிவம் போலவும் என் மனதில் ஒரு படிமம் தோன்றுவதுண்டு. எப்போதாவது ஒரு நாளில் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என பலதடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் நேரம் வாய்த்ததில்லை. இன்று போனாலென்ன? நான் முடிவு செய்வதற்கு முன்னமே மனக்குருவி உள்ளே நுழைந்துவிட்டது. வாசலிலே பெரிய இரும்புச் சங்கடப்படலை. திறந்து கிடந்தது. அதில் விருந்தினருக்கான பார்வை நேரம் 9:00 – 5:00 என அறிவித்தல் பலகை தொங்கியது.
உள்ளே நுழைந்ததும் முகப்பில் ஒரு வழித்தட வரைபடமிருந்தது. ஒருபுறத்தால் புறப்பட்டால் ஒருவட்டச்சுற்றில் மீள தொடங்கிய இடத்திற்கு வந்துசேர முடியும். என் வலக்கைப் புறத்தில் பராமரிப்பு அலுவலகம் இருந்தது. அத்திசையில் திரும்பினேன். புல் வெட்டுவோர் பூமரங்களை நாடுட்வோர் குழி தோண்டுவோர். கல்லறைகளைச் செப்பனிடுவோர் எனச் சீருடையணிந்த தொழிலாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. இள வெயில் பூக்களில் பட்டெழுப்பும் கவிச்சி மூக்கிலிருந்து பரவி மனசில் நிறைந்தது. உயர மரங்களின் கீழ் மண்ணில் தன் போக்கில் கிறுக்கி விளையாடிக்கொண்டிருந்தான் சூரியப் பெடியன். அவனுக்கென்ன கவலை? எதிரிலிருந்து இளம் பெண்னொருத்தி காலைவணக்கம் என்றபடி என்னைக் கடந்தாள். என் பதில் வணக்கத்திற்குக் கூட காத்திருக்கவில்லை. அவளும் நடைப்பயிற்சிக்கு வந்தவள் போலவே தோன்றியது. வழித்தடத்தின் இடக்கைப் புறத்தில் முதல் கல்லறையைச் சந்தித்தேன். புத்தம் புதிது. வெறும் மண்ணால் மூடப்பட்டிருந்தது. இரண்டு மூன்று மாதங்கள் கழிந்திருக்குமா?. தெரியவில்லை. மரத்தில் இறுக்கப்பட்ட சிறுசிலுவை ஒன்று பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரிகப் பட்டு ஊன்றப் பட்டிருந்தது. அதுவே தலைமாடென எண்ணிக்கொண்டேன். மார்பில் காய்ந்துபோன ஒருமலர்க் கொத்து. கால்மாட்டில் “NY” எழுத்துகள் பொறிக்கப்பட்ட தொப்பி ஊறப்பட்ட சிறு தடியின்மேல் கொழுவியிருந்தது. இறந்தவன் தினமும் தொப்பி அணிபவனாக இருக்கலாம். சிலசமையம் பேஸ்போல் பிளேயராக இருப்பானோ?
மூன்று மாதக் குழந்தைக்கு ‘சில்லாலைப் பரியாரி’யின் கிரந்தி எண்ணை தேய்து, கைகால் பிடித்து, பனையோலைத் தடுக்கில் கிடத்திவிட்டிருக்க, அது நிழலசையும் இளவெயிலில் உடலசைத்து கை கொட்டி முறுவலிப்பது போன்ற மனத்தோற்றம் எழுந்தது. அடுத்தடுத்த கல்லறைகள் மிகப் பழமையானவை. சீமெந்தாலாணவை. சிறு வீடு அல்லது தேவாலையம் போன்ற தோற்றந்தந்தது. இவை அடர்த்தியன முதிர்ந்த மரங்களின் கீழ்அமைந்திருந்தன. அப்பால் நடந்தால் இடைக்காலத்தவை சீமெந்தில் அமைக்கப்பட்டு கறுப்பு சலவைக் கல்லில் அவர்கள் விபரக்
குறிப்பிருந்தது.
எனக்கு மறுஜென்மம் போன்ற விடையங்களில் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை. மனித வாழ்க்கை ஒரு முறைதான். முடிந்தவரையில் வாழ்ந்து களி(ழி)ப்பதே சிறப்பு என்ற நினைப்புள்ளவன். இருந்தாலும் இக் கல்லறையைப் பார்த்தபோது புதிய திசையில் எண்ணங்கள் புறப்படத் தொடங்கியது. மனித வாழ்வு முடிந்த பிற்பாடு இரண்டாம் ஜென்மம் என்பது இக் கல்லறை வாழ்வாக இருக்குமா? இவற்றிலும் குழந்தை விடலை முதுமை எனப் பருவங்கள் இருக்குமா? சில கல்லறைகளின் தோற்றமே இவ் எண்ணம் எழக் காரணி. கல்லறைகளின் தோற்றம் பாராமரிப்பு உறவினர்களின் சிரத்தை என்பனவற்றின் மூலம் அதன் வயதைக் கணிக்ககூடியதாக இருந்தது. முதிய கல்லறைகளுக்கு யாராவது வந்து போகும் தடங்கள் ஏதும் தெரியவில்லை. அவற்றின்மீது ஒருவித துயர் படிந்துகிடப்பதான உணர்வெழுந்தது. விடலை அல்லது நடுத்தரவயது கொண்ட கல்லறைகள் பல அழகான பூஞ்செடிகளாலும் பிளாஸ்டிக் பூக்களாலும் அலங்கரிகப்பட்டிருந்தன. சில கல்லறைகளின் முன்னால் பூஞ்செடிகள் நாட்டப்பட்டு வீட்டு முற்றம் போலத் தென்பட்டது. பலவற்றில் அருகில் ‘டுலிப்ஸ்’ மலர் மொட்டுக்கள் முகிழ்த்திருந்தன, பல கல்லறைகளின் மீது ஓளிவிட்டு அணைந்த மெழுகுவர்த்தியின் சுவடுகளைக் கண்டேன். ஒன்றல்ல சிலவற்றின் அருகில் "அரிக்கேன் லாந்தர்" விளக்கு வைக்கப்பட்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த உயிர்ச்சுடர் அணைந்துவிட்டது என்பதை சுட்டும் விதமாக வைத்திருப்பார்களா? அல்லது சில இனக்குழுமங்களின் ஐதீகமா?
தெரியாது.
ஒரு சிப்பந்தி புற்தரையை வெட்டிச் சீர்செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லறையின் அருகில் வரும்போதும் சரவக்கத்தியை முகத்தில் வைக்கும் சிகை அலங்காரக் கலைஞனின் பொறுமையையும் அவதானத்தையும் அவனுள் உணர முடிந்தது. கல்லறைக்கு சிறு ஊறுகூட நிகழ்ந்துவிடக் கூடாதென்பதில் அவன் முழுக்கவனமும் குவிந்திருந்தது. வெளியில் வாழும் மனிதர்களை நினைத்துப் பார்த்தேன். இவன் கூட தன்னோடு வாழும் உறவுகளோடு இங்ஙனம் நடந்து கொள்வானா?.
தெரியவில்லை.
நடுவில் பெரு முற்றம் போன்ற அமைப்பு இருந்தது. அதில் இருபுறமும் நீளச் சுவர்கள் அமைத்திருந்தார்கள். சுவரில் நீள்சதுர சலவைக்கற்களில் இறந்தவரின் தகவல்கள் பொறிக்கப்பட்ட பல நினைவுப் பலகைகள் வரிசையாக பொருத்தப்பட்டிருந்தது. போரில் அல்லது சுனாமி போன்ற பேரழிவுகளில் காணாமல் போனவர்களின் நினைவிடமாக இருக்குமோ? அல்லது நிலம் வாங்கிப் புதைப்பதற்கு வசதியற்றவர்கள் எரித்துவிட்டு நினைவுக்கற்களை மட்டும் பொறித்திருப்பார்களோ? வசதி வாய்க்கும் போது யாரிடமாவது விசரிக்க வேண்டும்
பிற்கால நினைவுக்கற்கள் தனிச் சலவைக்கற்களால் ஆனது. பலதும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டது. நவீன வடிவங்களில் இருந்தன. பலவற்றில் கவித்துவமான கல்லறை வாசகங்கள் இருந்தன. பின் நவீனத்துவ கூறுகள் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லைப் போலும். ஒரு கல்லறை இதயத்தின் வடிவத்தில் இருந்தது. காதல் வயப்பட்ட காலத்தில் மரித்தவள் உள்ளே உறங்குகிறாள் என எண்ணிக்கொண்டேன்.
சற்று புறம்பாக செம்பளுப்பு நிற சலவைக்கற்களால் அமைக்கப்பட்ட நடுகற்கள் பல கூட்டங்கூட்டமாக காணப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட குறிப்புகள் சீன அல்லது ஜப்பான் மொழிக்குடும்ப எழுத்துக்களில் அமைந்திருந்தன. கனடா ஒரு பல்கலாச்சார நாடுதான். இருந்தாலும் ஒவ்வொரு இனக்குழுமமும் தத்தமது கலாசாரத்தை பேணியபடி, அல்லது பேண முற்பட்டபடி, மிஞ்சிப்போனால் குறைந்தபட்சம் அவர்தம் அடையாளத்துக்காக போராடியபடி தங்களுக்குள் கூட்டங்கூட்டமாகவே வாழ்கிறார்கள். அடுத்த இனங்களோடு கலப்பதென்பது சொற்பம். ‘செத்தாலும் இணையோம்’ என்பதைப் போல கல்லறைகளிலும் அப்படித்தானா?
ஒரு வண்ணத்து பூச்சி ஒவ்வொரு கல்லறையாக அமர்ந்தெழுந்து சென்றது. ஏதோ சேதிசொல்லிப் போவது போல. புலுனி அல்லது மைனா வகைசார்ந்த ஒரு குருவிக் கூட்டம் கல்லறைகளின் மேலிருந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தன. கல்லறையில் உறங்குபவர் குருவி ரூபத்தில் எழுந்திருந்து ஒரவரோடு ஒருவர் பறைந்து கொண்டிருக்கும் தோற்றம் எழுந்தது.
நான் இறந்ததும் என்னை என்ன செய்வார்கள்?. நான் அதற்கு என்ன செய்து வைக்க வேண்டும்? பலரும் இருப்பில் பணம் போட்டு வைப்பார்கள். தனக்குத் தானே கல்வெட்டெழுதி வைத்தவரைப் பார்த்திருக்கிறேன். அவர் பாட்டன் பூட்டன் காலத்து தோம்பு தோரனம் எல்லாம் அதில் இருந்தது. நான் இவையெல்லாம் அவசியமா எனக்கேட்டபோது தன் பேரன் பூட்டிகாலத்திற்கு எம் முன்னோர் பெருமையெல்லாம் தெரியவேண்டும் என்றார். இவர் பங்குக்கு என்ன செய்து வைத்தார். கல்வெட்டெழுதியதைத் தவிர. கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்த பெண்ணைப் பார்த்தேன். அவள் அதற்குமுன் செய்துவைத்த வேலை தனது உடலிலிருந்து புடவை கலையாதிருக்க நிறையப் பூட்டூசிகளை பயன்படுத்தியிருந்தாள். இறந்தபின்பு கூடத் தன் அங்கங்களை அடுத்தவர் பார்த்து
விடக்கூடாது. தன் மானம் போய்விடக் கூடாது என்ற எண்ணப் பாடல்லவா? நான் என்ன செய்துவைக்க வேண்டும்.
‘எரித்துவிடுங்கள். என் நினைவாக எதாவது ஒரு பூங்காவில் நிழல்தரு தருவொன்றை நாட்டுங்கள். வேண்டுமாயின் அடியில் ஒரு கல்லிருக்கையை போட்டுவையுங்கள். என் நினைவுவரும்போது ஒரு ஐந்து நிமிடம் இருந்துவிட்டுப் போங்கள். நான் பறவைகளோடு பேசிக் கொண்டிருப்பேன்’ எனப் பிள்ளைகளிடம் செல்லிவைக்கலாமா?
ஆசை எந்தெந்த வழியிலெல்லாம் சிந்திக்கவைக்கிறது. என் வாழ்வு என்பது எனக்கும் மரணத்துக்குமான போரட்டம். மரணம் என்னோடு நிழல் போலவே தொடர்கிறது. அதனிடமிருந்து பலதடவை தப்பித்து வந்திருக்கிறேன். ஆனாலும் என்றோ ஒருநாளில் அதனிடம் தோற்பேன். அது தெரிந்தது.. தோற்றபின் என்ன வாழ்வு? என் அவா? தோற்றவனுக்கு வாழ்வுதான் உண்டா? அதற்குப்பின் நான் என்னவானால் தான் எனக்கென்ன? அதற்குப் பிறகான தெரிவு எனக்குரியதல்லவே?. அது இருப்பவர்களுக்குரியது. அவர்கள் நினைக்கும் படி வாழ்வது மட்டுமே எனக்குரியது. இன்று அவரவற்குள்ள நெருக்கடியில் போனவர்களை சிந்திக்க ஏது நேரம்? அவர்களுக்கு ஒரு சுமையை ஏன் விட்டுச் செல்லவேண்டும்.
வேணிற் காலத்தை அழகு படுத்துவதற்கென்றே விதவிதமான பறவைகள் வந்துவிடுகின்றன. அவற்றின் காமமும் காதலும் கூத்தும் கும்மாளமும் இளவேனிட்காலத்துக்கு புது உத்வேகத்தைத் தருகிறது. அருகருகே உள்ள இரண்டு நடுகற்களின் மீது அழகிய இணைகள் குந்தியிருக்கிறன. நல்ல மினுக்கென்ற கருநீலத் தலை. வயிற்றுப்புறம் செம்பளுப்பு, தலையில் பெரிய கொண்டை. ஆணழகன் போட்டிக்கு வந்திருப்பது போலிருக்கிறது. அது அடுத்த நடுகல்லில் இருக்கும் தன் இணையை மையலுக்கழைத்தது. இவை இரண்டும் இனிய காதலர்களின் நடுகற்களாக இருக்குமோ? பெயரைப் பார்க்கும் ஆவல் உந்த அருகே சென்றேன். அதிலிருந்த பதிவு எனக்கு புரியக்கூடிய மொழியல்ல.
சில ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு நாட்டில் ஒரு நள்விரவில் என் இளையவன் திடீரென போய்விட்டான். உடனே பாரீஸ் புறப்படவேண்டியிருந்தது. நான் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே சச்சரவுகள் தொடங்கி விட்டன. மரணத்தின் போது சச்சரவுகள் வருவதொன்றும் புதிதல்ல. எம்மவர்க்கு இயல்புதான். சச்சரவு இல்லை என்றால் அதுவேதான் புதினம். அவன் இலக்கியப் பரப்பில் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவன். ஓரு சிற்றிதழ் கூட நடாத்திவந்தான். அந்தவகையில் இது வழமையிலிருந்து சற்று மாறுபட்ட சச்சரவு. அவனது உடலைப் புதைப்பதா? அல்லது எரிப்பதா? இதுவே எனக்கு முன்வைக்கப்பட் கேள்வி. நாங்கள் பிறப்பால் சைவர்கள். ஏரிப்பதே வழக்கம். இருந்தாலும் கண் மூடிக்கொண்டு மதக் கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் அல்ல. என்னை விடவும் சிறப்பாக மதங்கள் சொல்லிய கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்பட்டவன் போய்விட்ட தம்பி. என்னைப் பொறுத்தவரையில் இறந்தவனுக்கு ஒரு கண்ணியமான வழியனுப்பும் சடங்கு வேண்டும். அது எதுவாக இருந்தாலும் காரியமில்லை. குடும்பத்தில் மூத்தவன் என்ற வகையில் இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தது. ஒரு புறத்திலே அவனது நன்பன். மறுபுறத்தில் என் மற்றைய இளவல்கள்.
நண்பன், தனது மகளுக்கு மரணம் சம்பவித்தபோது என் தம்பி சொன்ன கூற்றை அப்படியே என்னிடம் ஒப்புவித்தான்.
‘எல்லோரும் செய்வது போல நீ எரிக்காதே. காசைப்பாரது ஒரு நிலத்தை வாங்கி புதைந்து நடுகல் இடு. உன் மகளின் நினைவெழும் பொழுதெல்லாம் நீ அந்த இடத்துக்கு வரலாம். அப்போது உன் மகளோடு உடனிருக்கின்ற உணர்வு கிடைக்கும்.’
எனவே அவன் விரும்பியது புதைப்பதைத்தான் என்றான். உண்மையில் இது ஆறுதல் வார்த்தைகள்தான். இதன்பின்தான் எனக்கு ஒரு நடைமுறையும் புரிந்தது. அந்த நண்பன் கிறிஸ்தவன். கிறிஸ்தவர்கள் புதைப்பதை வழக்கமாக கொண்டவர்கள். புலம் பெயர்ந்த பிற்பாடு இடுகாட்டில் நிலம் வாங்கிப் புதைப்பதென்பது பொருள் ரீதியாக எம்மவர்க்கு பெருத்தசுமை. பலருக்கு எரிக்கவே வசதிப்பட்டது. இதற்கு இன்னொரு காரணியும் இருந்திருக்கலாம். புலம் பெயர்ந்த பிற்பாடும் நெடுங்காலமாக ஊர் மீளும் அவாவோடு வாழ்தவர்கள் எம் மக்கள். அதனால் புலம்பெயர்ந்த நாட்டில் இடுகின்ற நடுகற்களை ஊர் மீண்டால் என்ன செய்வது? இப்போது எல்லோருக்கும் யதார்த்தம் தெரியும். எல்லோரும் புகலிட நாடுகளில் வேருன்றி அகலக்கிளை பரப்ப தொடங்கி விட்டனர். பலரும் வசதி படைத்தவர்களாகி விட்டார்கள். பழையபடி வழமைக்கு திரும்பி வருகின்றனர்.
என் பக்க உறவுகளின் கூற்று வேறுவிதமாயிருந்தது. அது மதம் சார்ந்ததோ உரிமை சார்ந்ததோ அல்ல. ‘’நண்பர்கள் இப்போது உணர்வு வேகத்தில் எல்லாம் சொல்வார்கள். சிலநாள் கழிந்தால் எல்லாவற்றையுமே மறந்துவிடுவார்கள். அவரவர் ஓட்டத்தோடு அவர்கள் வாழ்க்கை அடங்கிவிடும். யாருமே கல்லறையைத் திரும்பிப்பார்க்கக் கூட நேரமிருக்காது. அது அனாதரவாக இருக்கும். நாங்கள்தான் பார்க்க வேண்டும். அதைவிடவும் வழக்கதில் உள்ள முறமையை பின்பற்றுவதே மேல்’ என்றார்கள். இதை விடவும் இறந்தவன்
பகிர்ந்துகொண்ட
சம்பவம் ஒன்று என் நினைவை குறுக்கறுத்தது.
இவன் போவதற்கு இரண்டாண்டுகளுக்கு
முன் எங்கள் குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்தது. இவனுக்கும் இளைய தம்பி ஒருவன் திருமணமாகி சரியாக ஒருவருட வாழ்வில் அவனது துணையை இழந்தான். முதல் மகப்பேற்றிலேயே மரணம் அவளைக் கொத்திச் சென்றது. மிக துயரமான சூழல். ஒருவாரத்தின்பின் சடங்குகள் எல்லாம் முடிந்தது. மறு காலை நகரின் மத்தியில் உள்ள நதியோரம் சகோதரர்
நாங்கள் நால்வரும் குந்தியிருந்தோம். அவளது அஸ்தியை கரைத்தபடி. அப்போது உடலை எரிப்பது தொடர்பாக இவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘எரிப்பதென்பது வெறும் உடலை மட்டும் எரிப்பதல்ல. இதிலை பெரிய தத்துவமே இருக்கிறது. எரிப்பதென்பது எல்லாவற்றையும் எரிப்பது. நினைவுகளை, துயரங்களை, கடந்தவைகளை எல்லாவற்றையும் எரிப்பதென்பதன் குறியீடு. நடந்தவை எல்லாவற்றையும் நினைத்து சோம்பி கிடக்காமல் எல்லாவற்றையும் எரித்துவிட்டு புதியவாழ்வுக்குள் நுழைவது. எம் முன்னோர் எதையும் அர்த்தமில்லாமல் செய்யவில்லை. வாழ்வு வலியது. நீ நடக்கவேண்டிய தூரம் மிகப்பெரிது. நீயேதான் அதை நடந்து கடக்கவேண்டும்.’
அவனது ஞானத்தின் ஆழத்தை கண்ட பெருமிதத்துடன் மௌனமாக இருந்தேன். இது வெறும் ஆறதல் வார்த்தைகளாக எனக்கு தோன்றவில்லை. நீரில் அஸ்தி கரைந்து கரைந்து கலந்து மறைகிறது. அவன் வார்த்தைகள் அடைத்து கண்கள் இன்னும் குளமாகவே இருக்கிறது.
இவன், துயருற்ற மனதைக் கரைக்கின்ற முயற்சியிலிருக்கிறான். வயதில் சிறியவன். அவள் பெற்றுப்போட்ட பச்சைக் குழந்தை வேறு. அவன் புதிய வாழ்வொன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அக்கறையின் வெளிப்பாடாகவே அந்தக் கரைத்தல்
நிகழ்ந்தது.
தன் நண்பனுக்கு கூறியதும் சகோதரனுக்கு கூறியதும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் அது இருப்போர் மனதின் துயரத்தை கரைக்கும் முயற்சியல்லவா? வாழ்வு பற்றிய அக்கறையின் வெளிப்பாடு அல்லவா? நானும் இந்த இலக்கியப்பரப்பில் இயங்குபவன். இது போன்ற பல சம்பவங்களை கடந்து வந்தவன். நண்பர்கள் வேன்டுமாயின் அவனது பெயரில் சமூகத்திற்குகந்த வேறு காரியங்களை செய்யலாம். இந்த இடத்தில் என் பட்டறிவுக்கு உறவினர் கூற்று சரியெனப்பட்டது.
இரண்டு கூஸ் பறவைகளின் கூச்சல் என் சிந்தனையை கலைத்தது. அவையிடும் எச்சங்களிலிருந்து கல்லறைகளை காப்பதற்காக யாரோ பணியாளன் அவற்றை துரத்தியிருக்க வேண்டும். அவற்றின் கூப்பாட்டில் மிகக்கொருரமும் துயரமும் நிரவியிருந்தது . சில சமையம் அவை வைத்த முட்டைகளை விட்டுப் போகின்ற துயரமோ? இப்போது நான் கல்லறைத் தோட்டத்தின் தென்மேற்குப்புற மூலைக்கு அண்மையாக வந்துவிட்டேன். மூதாட்டியொருத்தி ‘பேர்ச்மவுன்ட’ வீதி நுழைவாயில் ‘கார்ப்பார்க்’கில் தன் காரை நிறுத்திவிட்டு பூங்கொத்தோடு கல்லறைத் தோட்டதினுள் விரைகிறாள். தள்ளாதவயது. துணைக்கு கூட யாரும் இல்லை. கறுப்பு நிறக் கல்லறையின் மேல் மஞ்சற்பறவையொன்று சிறகை அகல விரித்து வெய்யில் காய்கிறது.
ஒருவட்டச் சுற்றில் முக்காற்பங்கு தூரத்தை கடந்து விட்டேன். நடைபாதையின் வலப்புற ஒரத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறது ஒரு பீரங்கி வண்டி. இரண்டாம் உலகமாயுத்தத்தில் பயன்படுத்தப்
பட்டதாக தகவற்பலகை பொறிக்கப்பட்டிருக்கிறது. பழமைப் பொருட்கள் என்ற வகையில் அழகுக்காகத்தான் நிறுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கல்லறைத் தோட்டத்திற்கும் பீரங்கிக்கும் இடையேயான தொடர்பென்ன? அந்த யுத்தத்தில் மரணித்தவர்களின் கல்லறைகளும் இதனுள் இருக்கக்கூடுமோ?. யோசித்தபடி இருபது கவடு தூரம் நடந்திருப்பேன். எதிர்புறமாக மற்றொரு பீரங்கிவண்டி. மனசு கேட்கவில்லை. ஒரு தடைவை இரண்டு பிரங்கிகளின் இடயில் நின்று கல்லறைத் தோட்டத்தைப் பார்த்தேன். பீரங்கியின் பின்னால் ஆயிரக்கணக்காக கல்லறைகள் பரந்து கிடக்கிறது பெரியதொரு பாறாங்கல் மார்பை அமுக்குவதை போன்ற உணர்வு. என் முன்னே விரிந்து கிடக்கிறது முள்ளிவாய்கால். திடுக்குற்று நிமிர்கிறேன். என் முன்னே
தத்திசென்ற மனக்குருவி அடியுண்டு வீழ்ந்து கிடக்கிறது.
நிணமும் தசையுமாய்.
0000
நன்றி: "கூர் 2012"