Wednesday, 2 January 2013

முள்வேலி






னித் தரித்தால்
உயிர் தரிக்காதென்றுணர்ந்த போது
கலங்கி
மண்தொட்டு வணங்கி கடல் கடந்தவன்
இருபதுதாண்டுகள் கழிந்து
மீள வருகிறேன்
எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள்

எது முடிந்தது?

மாறி மாறிப் பெய்த மழையால் கூட
கழுவப்படாமல் கறைபட்டுக் கிடக்கிறது
தேசம்

மூச்சில் இன்னும் கந்தக நெடி
பல்லி சொல்வது கூட
எந்திர துப்பாக்கி சத்தம்போல் அதிர்கிறது

அச்சம் கலையாத முகத்துடன்
தங்களுக்கான கூடுகளை முடைகின்றன
தூக்கணாங் குருவிகள்

பல்லாயிரக்கணக்கானவரின் மரண ஓலங்கள்களால்
மெழுகப்பட்ட சுவர்களின் மீது
பல்லிழித்தபடி காட்சி தருகிறான்
அரசன்
அவனது பார்வை விலக்கி
சிறுநீர் கழிப்பதற்குக் கூட
 என்னால் ஓதுங்கமுடியவில்லை

விதைக்கப்பட்ட ரவைகளில் இருந்து முளைவிட்டிருக்குமோ?
என ஐயுறுவண்ணம்
தேசம் முழுவதும் இராணுவச் சிறுவர்கள்

-9 வீதியின் மேற்கோரம்
ஒற்றைக்காலை போருக்கு காவுகொடுத்தவள்
உயிர்க்கூட்டை இறுகப் பிடித்தபடி குந்தியிருக்கிறாள்
ஏங்கிய விழிகளுடன்

எதிரே
வீதியின் கிழக்கே  
அவள் ஊரும்
தென்னைகள் சூழ்ந்த வளவும்
போக முடியாத வீடும்

காட்டுக் குருவிகளால் கூட
என்னிடம் ஒரு இயல்பான காலையை
அழைத்துவர முடியவில்லை

பேயறைந்தவர்கள் போல்
எல்லோரிடமும்
இருள் கனத்த வெறுமை

இருந்தாலும்
எல்லாம் முடிந்துவிட்டதென்கிறார்கள்
முடிந்ததை பேசுதற்கும் அஞ்சுகிறார்கள்

ஒன்றுமே நடக்காததைப் போலவும்
எதையுமே பார்க்காததைப் போலவும்
நிலத்தின் எல்லையில் எழுந்து  நிற்கிறது
பாரிய தொலைபேசி விளம்பரம்

முடிவாய்
நான் தவழ்ந்த மண்ணில்
ஒருபிடி எடுத்து வரும் ஆவல் உந்த
ஊர் நுழைய முனைகிறேன்

முள் வேலி

இன்னும் சிறைப்பட்டே கிடக்கிறது
என் சிற்றூர்
ooo


ஜுன் 6, 2010